சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம்
விடுதலைக்காக போராடுகின்ற ஒரு தேசிய இனத்தின் தலைவர்கள் அந்த காலகட்டத்துக்குரிய புரட்சிகரமானவர்களாக இருந்தால் மட்டுமே போராட்ட வரலாறு புரட்சிகரமான பாதையில் பயணிக்கும். மாறானதாக இருந்தால் அது எதிர்ப் புரட்சிகரப் பாதையில் பயணித்து பேரழிவை சந்திக்கும்.
அவ்வாறு எதிர் புரட்சிகர வளர்ச்சிப்பாதையில் பயணித்த ஓரினத்தின் வரலாற்றை சுதாகரித்து மீண்டும் புரட்சிகரமான பாதைக்கு வழிநடத்தி செல்வது என்பது மிகக் கடினமானதும். அதற்கு அதிக விலையையும் கொடுக்க வேண்டிய இருக்கும்.
அத்தோடு அந்த இனம் காலத்தால் பின்தங்கியிருக்க வேண்டி ஏற்படும். அத்தகை ஒரு நிலையை இப்போது ஈழத் தமிழினம் சந்தித்திருக்கிறது.
பௌத்த இனப்படுகொலை வாதம்
இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த இனப்படுகொலைவாதம் தொடர்ந்து புரட்சிகர வளர்ச்சி அடைந்து செல்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பின்னோக்கி எதிர் புரட்சிகர வளர்ச்சி அடைந்து செல்கிறது. இது ஒரு தற்செயல் நிகழ்வல்ல தொடர்கதை.
1940களில் 50 க்கு 50 கோரிக்கை முன்வைத்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதனைத் தானே கைவிட்டு ஓடினார். பொன்னம்பலத்தின் ஒற்றை ஆட்சிக் கொள்கையை பிழை, துாரோகம் என்று சொன்ன எஸ்.ஜே.வி.செல்வநாயகம் சமஸ்டிக் கொள்கையை முன்வைத்து புவியியல், நிர்வாக ரீதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயக நிலம் என அடையாளப்படுத்தி அந்தத் தாயக நிலத்துக்கு சமஸ்டி அதிகாரம் கொண்ட ஆட்சி முறை வேண்டு என்றார்.

ஆனால் எட்டு வருடங்களுக்குள் முத்துக்கரணம் அடித்து அதிலிருந்து பின்னோக்கி கீழ் இறங்கி தான் சென்ன வடக்குக் கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட தமிழர் தாயகத்தை மூன்று சபைகளாக பிரிக்கின்ற பிராந்திய சபைகள் ஒப்பந்தத்தில் சிங்கள பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் 26-07-1957ல் கையொப்பமிட்டார் (பண்டா-செல்வா ஒப்பந்தம்).
அதன் பின்னர் பிரதமர் டட்லி சேனநாயக்காவுடன் ஒரு அலகு என்று தானே சொன்ன வடக்கு-கிழக்கை தாயகத்தை ஏழு மாவட்ட சபைகளாகத் துண்டாடும் ஒப்பந்தத்தில் 24-03-1965இல் கையெழுத்து விட்டார்.(டட்லி-செல்லா ஒப்பந்தம்).
இவரின் பாதையில் பின்னர் அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் 1977ம் ஆண்டு தேர்தலில் தனிநாட்டுக்கான மக்கள் ஆணையைப் பெற்ற பின்பும் எந்த அரசியல் அதிகாரமுமற்ற ஏழு மாவட்ட அபிவிருத்தி சபைகள் திட்டத்திற்கு ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுக்கு தோள்கொடுத்து தமிழ் மக்களின் தாயக கொள்கைக்கு கொள்ளி வைத்தார்கள்.
இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் கீழ் உருவாக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தில் வடக்கு-கிழக்கு இரண்டு மாகாண அலகுகளாக பிளந்து இருப்பதை தமிழ் மக்கள் ஏற்கவில்லை. தமிழர் தாயகத்தை பிரிப்பதை ஏற்காத தமிழ் மக்களின் வரலாற்றில் செல்வநாயகம் முதலில் மூன்று அலகாக பிரித்தார்.
பின்பு ஏழு அலகாக பிரித்தார். அவரின் வாரிசு அமிர்தலிங்கம் அந்த ஏழு அலகுகளையும் அரசியல் அதிகாரம் அற்ற வெறும் அபிவிருத்தி மாவட்டங்களாக பிரித்தார்கள். இதனைத் தான் எதிர் புரட்சிகர வளர்ச்சி என நாம் சொல்கிறோம்.
ஆனால் சிங்களவர்கள் தமிழர்களை வடக்குக்-கிழக்கில் ஒரு அமைச்சர் கூட கால் வைக்க முடியாத ஒரு காலகட்டம் நிலவிய காலத்துக்கு பதிலாக இப்போது சிங்களத்தின் ஜனாதிபதி கால்நடை பயிலும் நிலைமை தோன்றி விட்டது.
இராணுவ முகாம்கள்
ஒரு சில முகாம்கள் இருந்த தமிழர் தாயகத்தில் இப்போது பல நூற்றுக்கணக்கான இராணுவ முகங்கள் இருக்கின்றன. முன்பு எண்ணாயிரம் இராணுவம் இருந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்து 46 ஆயிரம் இராணுவமாக உயர்ந்து இருக்கிறது.
தமிழர் தரப்பில் கோட்டைகளுமில்லை, அகழிகளுமில்லை, ஒரு குண்டூசியை கூட எடுத்து குத்துவதற்கு ஆளில்லாமல் போயிருக்கிறது. இதனைத்தான் தமிழர் தரப்பின் புரட்சி எதிர்ப் புரட்சிகர வளர்ச்சி என்கிறோம்.

அதன் பின்னரான ஆயுதப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிகளாக ஏற்று அவர்களின் பிரதிநிதிகளாக 2004இல் தேர்தலை எதிர்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் சென்றது.
ஆனால் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேசிய அபிலாசை வென்றெடுப்பதற்காக போராடாமல், தமிழ் மக்களுக்கு எந்தவித நலனையும் பயக்கவல்ல அரசியல் நகர்வுகளை செய்யாமல், மீண்டும் அரசுடன் கூட்டி சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றியது.
இறுதியிலும் இறுதியான கொடூரமான கொடுமை என்னவெனில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்புக்கு தலைமை தாங்கிய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து அவருக்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்களை கோரிநின்ற அயோக்கியத்தனத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
இலங்கைத்தீவின் இன முரண்பாடு என்பது சடுதியாக ஏற்பட்டதோ, அல்லது ஒரு குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டதோ அல்ல. அது நீண்ட வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இலங்கைத் தீவுக்கு பௌத்த மதம் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து அதற்கான அடிப்படைகளை இனங்காண முடியும்.
முள்ளிவாய்க்கால் பேரவலம்
இலங்கைத் தீவின் பௌத்த மதத்திற்கும், இந்தியாவின் இந்து மதத்திற்கு இடையிலான முரண்பாடு, பௌத்தம் இந்தியாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதன் பின்னணி, இலங்கைத் தீவுக்குள்ளே தேரவாத பௌத்த – மகாஞான பௌத்த முரண்பாடு, அதில் இருந்து எழுந்த அச்சம் என்பன ஈழத் தமிழர்கள் மீதான தேரவாதபௌத்த சிங்கள இனத்தின் வெறுப்பாகவும், குரோதமாகவும் வளர்ந்து இலங்கை தீவில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கின்ற பெருவிருப்பே சிங்கள பௌத்த தேசத்தின் தேசிய நலனாக இன்று வளர்ந்து நிற்கிறது.
இவ்வாறு தமிழ் மக்களை அழித்தொழிப்பதையும், இனக்கலப்பு செய்வதையும், சிங்கள இனமயப்படுத்துவதையும் நோக்காக கொண்டு தான் சிங்கள தேசத்தின் தலைமைகளும், அதன் பௌத்த பீடங்களும், இலங்கை அரசியல் சட்டமும், நீதித்துறையும், அதன் நடைமுறைகளும், அரசின் அனைத்து திணைக்களங்களும், நிர்வாக இயந்திரங்களும் செயற்படுத்தப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் தமிழினம் மிகக் கொடூரமாக அழித்து ஒழிக்கப்பட்டு முடக்கப்பட்ட பின்னர் கத்தி, துப்பாக்கி, பீரங்கி, ரத்தம் இன்றி அரசு அனுசரணை என்றும் இனவாதம் வேண்டாம், பொருளாதார அபிவிருத்தி ஒன்றே போதும் என்ற கருத்தியல் அனைத்து மட்டங்களிலும் விதைக்கப்பட்டு வருகிறது.
இது மிகவும் அபாயகரமான ஒரு போக்கு. கடந்த 76 ஆண்டுகால தமிழினத்தின் மிதவாத தலைமைகள் எனப்படுவோர் சிங்கள அரசுடன் கோரிக்கைகளை முன் வைப்பதும் பின்னர் அரசுட ஒட்டி உறவாடி ஏதாவது பெற்று விடலாம் என்று கூட்டுச் சேர்வதும், தேர்தலை எதிர்கொள்ளும் காலத்தில் மட்டும் அரசாங்கம் ஏமாற்றி விட்டது என தமிழ்மக்களிடம் ஒப்பாரி வைத்து தமிழ் மக்களின் வாக்கை தமது பைகளிலே நிரப்பிக் கொள்வதுமான வரலாறே தொடர கதையாகி விட்டது.
இத்தகைய சூழலில் முள்ளிவாய்க்கால் பேரவலம் பேரிழப்புக்களையும், துயரங்களையும், வலியும், வேதனையும், சொல்லனார் துன்பங்களையும் சுமந்த தமிழ் மக்களை மிதவாத தலைமைகள் அரவணைக்க தவறியதன் விளைவு தமிழ் தலைமைகளிடமிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்த தொடங்கி விட்டது.
விடுதலைக்கான ஆயுதப் போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களை அரவணைத்து பாதுகாக்க வேண்டிய தமிழ் தலைமைகள் சிங்களத்துடன் தொடர்ந்து கூட்டு சேர்ந்ததன் விளைவு தமிழ் மக்கள் பூசாரி வேண்டாம் நாமே நேரடியாக யாசிப்போம் என்ற நிலையில் சிங்கள இனவாத கட்சிகளிடம் சரணடையத் தொடங்கி விட்டனர்.
கறுப்பு யூலை
இந்த சரணடைவு என்பது சின்ன மீன்கள் பெரிய மீனின் வாய்க்குள் போகும் செயலுக்கு ஒப்பானது. 1983 கறுப்பு யூலை இனவழிப்புக்கு தலைமை தாங்கிய ஜே.வி.பி இப்போது முகமூடி அணிந்து எம்.பி.பி என்ற பெயரில் தமிழ் மக்களை அரவணைக்க போகிறார்களாம். இதனை நம்பும் ஒரு கூட்டம் ஈழத் தமிழரிடம் இருக்கத்தான் செய்கிறது.
முள்ளிவாய்க்காலோடு எந்த பாதுகாப்புமற்ற தமிழர்களை விழுங்கி இனக்கபளீகரம் செய்யும் நடவடிக்கை ஈடுபட்டிருக்கிறது. பாம்பு கொத்தி உண்பதில்லை அது முழுமையாக விழுங்கி உண்ணும் இதனைத் தான் இப்போது ஏம்.பி.பி செய்கிறது.
இந்த ஜேவிபி வந்த பாதை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தோழர் சண்முகதாஸ் என்ற ஒரு தமிழரின் தலைமையின் கீழ் இடதுசாரி இயக்கத்தில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி வெளியேறி சிங்கள இளைஞர்களைக் கொண்டஒரு சிங்கள இடதுசாரி அமைப்பை ரோகண விஜயவீர உருவாக்கினார்.

அதுதான் ஜேவிபி என்பதிலிருந்து அதன் ஆரம்பமே தமிழின எதிர்ப்பு என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். 1971இலும் 1989இலும் இரண்டு முறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்த ஜே.வி.பி ஆயுத வழியில் தம்மால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாமல் போன போது அது தனது தந்துரோபாயத்தை மாற்றிக் கொண்டனர்.
அதற்கமைய ஆட்சியில் உள்ள கட்சியுடன் கூட்டு சேர்வதற்கான பொருத்தமான தருணம் சந்திரிகா காலத்தில் ஏற்பட்டது. சந்திரிகா அரசுடன் கூட்டிச்சேர்ந்து தீவிர தமிழின எதிர்ப்புவாதம் பேசி சிங்கள மக்கள் மத்தியில் தம்மை பலப்படுத்தினர். அதன் அடுத்த கட்டம் கட்சிக்குள் சந்திரிகாவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான முரண்பாடு எற்றப்பட்ட போது பலமுள்ள மகிந்த பக்கம் சார்ந்து தம்மை மேலும் பலப்படுத்தினர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு கிராமம் தோறும் சென்று இனவாதம் பேசி சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து வன்னி போர்முனைக்கு அனுப்பியவர்களும், சமாதான காலத்தில் “தமிழர்களுடன் பேச்சுக்கு இடமில்லை.
யுத்தமே இறுதி முடிவு, அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும்“ என்று சமாதானத்துக்கு எதிராக கண்டியிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட அநுரகுமார திசாநாயக்க தான் இன்று காங்கேசன் துறை வீதியில் கைவீசி நடைபயிற்சியில் ஈடுபட்டு தமிழ் மக்களை தம்பக்கம் இழுக்கப் பார்க்கிறார்.
இலங்கை மக்கள்
அனைவரும் இலங்கை மக்கள் என்று இலங்கை தேசியம் பேசுகிறார். அநுர இலங்கை தேசியம் பேசுவது தமிழ் மக்களை சிங்களமயப்படுத்தவே. சுட்டுக்கொல்லும் இனப்படுகொலையை செய்த ஜே.வி.பி இப்போது தமிழ் மக்களை அனைத்து சிங்கள இனக்கலப்பு செய்து சிங்கள இனமயமாக்கும் இனப்படுகொலையை செய்கிறது.
1970 களின் பின்னர் தமிழ் மண்ணுக்கு வருவதற்கு சிங்கள தலைவர்களும், அமைச்சர்களும் பயந்தனர். காரணம் அவர்கள் வடகிழக்குக்கு செல்லும்போது பெருந்தொகையான மக்கள் கருப்பு கொடிகாட்டி அவர்களை எதிர்ப்பர். அது அவர்களுக்கு அவமானமாக கருதப்பட்டது.
அதனாலேயே சிங்கள தலைவர்கள் தமிழர் தாயகத்துக்கு வருவதை தவிர்த்தனர். 1990களின் பிற்பாடு கரும்புலிகளுக்கு பயந்து வட கிழக்குக்கு வர சிங்கள தலைமைகள் பயந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சிங்களத் தலைமைகள் எந்த அச்சமும் இன்றி வட-கிழக்கின் வீதிகளில் உல்லாசமாக நடை பயின்றனர்.

தமிழ் மக்களைப் பார்த்து வணக்கமும் சொல்கின்றனர். ஆனால் தமிழ் மக்களுக்கு தீர்வை தரவோ, அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவோ இந்த சிங்கள தலைவர்கள் தயார் இல்லை என்பதை கூடதமிழ் மக்களுக்கு சரியாக எடுத்துச் செல்வதற்கு தமிழ் தலைமைகளால் முடியவில்லை.
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைதான் பெற்றுக் கொடுக்க முடியாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசின் உண்மை முகத்தையாவது புரிய வைத்திருக்க வேண்டும். இப்போது தமிழ்மக்கள் தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும் முதலில் என்ன செய்ய வேண்டும், அதற்கான வழிவகை என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமானது.
“மக்களை பாதுகாக்க வேண்டும்“, “நிலத்தை பாதுகாக்க வேண்டும்“, “போராடக்கூடிய போராட்ட சக்திகளை பாதுகாக்க வேண்டும்“. இதுவே தமிழ் மக்களின் கொள்கையாக இருக்க வேண்டும். உலக வரலாற்றில் இழந்த நிலத்தையும், மொழியையும், பண்பாட்டையும், மக்களையும் மீட்டெடுத்த ஒரே இனக்குழுமம் யூதர்கள் மட்டுமே.
ஆனால் ஆஸ்திரேலியாவின் Aborigines, அமெரிக்க செவ்விந்தியர், மாயா மக்களும் தாம் இழந்த நிலத்தையும் மக்களையும் மீட்டதுமில்லை, இனி ஒருபோதும் மீட்கவும் முடியாது.
தமிழர் தாயக நிலப்பரப்பிலிருந்து மக்கள் வெளியேறுவதும், தாயக நிலப்பரப்பு சிங்கள குடியேற்றங்களால் அபகரிக்கப்படுவதையும் உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசிய இனம் ஒபஜின்கள் மற்றும் செவ்விந்திய, மாயா மக்கள் அடைந்த துயரகரமான வரலாற்று வரிசையில் தாமும் இணைந்து கொள்வதாகி விடும்.
இந்தியாவின் சமாசாரம்
இப்போது இந்துமாகடல் அரசியல் ஈழத்தமிழருக்கு சாதகமான ஒரு நிலையை தோற்றம் பெறுகிறது. ஈழத் தமிழர்களின் தாயக பூமி அதன் அமைவிடம் காரணமாக என்றும் இல்லாத அளவு முக்கியத்துவத்தையும் சாதகத் தன்மையையும் கொடுக்கிறதோ அதே அளவுக்கு அதன் கேந்திர அமைவிடம் சார்ந்து இன்று எழுந்திருக்கும் இந்து சமுத்திர ஆளுகைப்போட்டி பாதகமான பக்கங்களையும் கொண்டுள்ளது.
இந்த உலகம் முற்றிலும் நலன் சார்ந்தது அவரவர் நலன்களின் அடிப்படையிலேயே உறவுகள் மலர்கின்றன. பரஸ்பர நலன்கள் அடையப்படாவிடத்தில் அரசுகளை பலாத்காரத்திலோ, யுத்தத்திலோ கொண்டு வந்து நிறுத்தும்.இப்போது இந்து சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா என்கின்ற இரண்டு அதிகாரம் மையங்கள் போட்டியிடுகின்றன.

ஆயினும் இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்து வரும் பிராந்திய சக்தியாகிய இந்திய தனக்குரிய பங்கையும், பாத்திரத்தையும் இந்த பிராந்தியத்தில் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும். இந்த முக்கோணப் போட்டிக்குள் தமிழரின் தாயக நிலப்பரப்பு கேந்திரத்தனம் பெற்றிருக்கிறது.
ஆகவே இந்த போட்டிக்குள் எம்மை நாம் தகவமைத்துக் கொள்ளவேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக சீனா இலங்கைத் தீவின் அரசியலிலும், பொருளியல் முதலீட்டிலும் முன்னுரிமை பெற்று வருகிறது. அதை எதிர்கொள்வதற்கு இந்தியாவும் இலங்கையுடன் சமாசாரம் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆயினும் இந்தியாவின் சமாசாரம் இலங்கை தீவில் அதன் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யவில்லை மாறாக அது பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் இப்போது அமெரிக்கா இலங்கை தீவின் உள்ளே காலொன்றுவதற்கான ராணுவ இடர்கால ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
அது சீனாவை எதிர் கொள்வதற்கான மூலோபாயத்தை மாத்திரமே கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்கா இலங்கைத் தீவுக்குள் வருவதை தமிழ் மக்களுக்கு சார்பானது என நம்பும் மெத்தப்படித்த தமிழர் கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. இப்போது அந்த கூட்டம் அமெரிக்காவுக்கு சாமரம் வீசி தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்று விடலாம் என மனப்பால் குடிக்கிறது.
அமெரிக்க அரசு
இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட அமெரிக்க அரசுக்கு எந்தவித அதிகாரமும் அற்ற தமிழர்களால் எதையாவது கொடுக்க முடியுமா ஆக குறைந்தது போராட்டத்திற்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள் எதுவும் இல்லாத தமிழ் மக்களால் அமெரிக்காவுடன் ஏதாவது ஒப்பந்தங்களை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியாத நிலையில் அமெரிக்கா எவ்வாறு தமிழர்களுக்கு உதவுவார்.
இந்த அடிப்படைகள் தெரியாத இன்றைய ஏமாளிக்கூட்டம் போலவே இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் பிரித்தானியார் தமிழர்களுக்கு எதிராக சட்டவாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரியாமல் பிரித்தானிய அரசுக்கு கடிதங்களையும், மனுக்களையும் அனுப்பிய கூட்டம் ஒன்று அன்றும் இருந்தது என்பதையும் குறிப்பிட்டுச் செல்ல வேண்டியுள்ளது.

விடுதலைக்காக போராடுகின்ற, அரசற்ற தமிழினம் அரசுகளுடன் உறவைப் பேணுவதும், ஆதரவை பெறுவதும் கடினமானது. இத்தகைய சூழலில் தமிழினம் புத்தி பூர்வமாக ராஜதந்திர நகர்வுகளைச் செய்ய வேண்டும்.
சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கு முயற்சிக்கின்ற தமிழினம் யாரை நண்பனாக்காது விட்டாலும் யாரை பகைவனாக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழினம் தனித்து நின்று போராடி எதனையும் சாதித்து விட முடியாது. இப்போது தமிழினத்துக்கு தேவையானதை வல்லமை வாய்ந்த அரசுகளின் உறவே அன்றி வேற எதுவும் அவசியமற்றது.எது எப்போது அத்தியாவசிய தேவை என்பதை அந்தந்த சூழலும் காலமும் தீர்மானிக்கின்றன.
""தக்கன பிழைக்கும் தகாதன அழிவடையும்"" தமிழினம் தக்கனகெனவாக இருக்க போகிறோமோ அல்லது இனியும் சிறுபிள்ளைத்தனமாக, படித்தும் முட்டாள்களாக, கண்ணிருந்தும் குருடர்களாகத்தான் இருக்கப் போகிறோமா என்பது தெரியவில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 03 February, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.