வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!
இலங்கையின் வாடகைச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த சிக்கல் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.
மீண்டும் காலாவதியான சட்டங்கள்
மேலும், இந்த வரைவுச் சட்டம் வாடகைச் சந்தையையும் நீண்டகால அடிப்படையில் வாடகைக்கு இருப்பவர்களையுமே பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீர்திருத்தம் என்ற பெயரில் நாடு மீண்டும் காலாவதியான சட்டங்களை நோக்கிச் செல்லக்கூடாது என அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை ஏற்கனவே 1972ஆம் ஆண்டின் வாடகைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களிலிருந்து விலகி, 2023ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சமநிலையான ஒரு கட்டமைப்பை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாடகைக்கு இருப்பவர்களுக்கு பாதிப்பு
வாடகைதாரர் ஒருவர் மாதாந்த வாடகை, நீர், மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தத் தவறினாலும், நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை அவர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க நில உரிமையாளர் கடமைப்பட்டுள்ள, இச்சட்டம் நில உரிமையாளர்களுக்கு அச்சத்தை எற்படுத்தும் என கூறியுள்ளார்.
இதனால் வீடுகளுக்கான விநியோகம் குறைந்து, வாடகை விலைகள் அதிகரித்து, இறுதியில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கே பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.