இந்திய குடியரசு தினத்தில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு!
இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்று கூறி தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு இடமளிக்கப்படவில்லை.
மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரச அதிகாரிகள் இதனை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் குடியரசுத்தின நிகழ்வில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தாங்கிய மேற்கு வங்க ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்திய குடியரசுத்தினம் ஜனவரி 26ஆம் திகதியன்று கொண்டாடப்படுகிறது.
