போராட்டக்காரர்களை அடக்க முற்பட்ட ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும்: லோகநாதன்
காட்டுமிராண்டித்தனமாக நடந்து போராட்டக்காரர்களை அடக்க முற்பட்ட ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் நேற்று(24) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைதி வழியில் கலைந்து செல்வதற்கு தயாராக இருந்த போராட்டக்காரர்கள் மீது அதிகாலையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை எல்லோருடனும் சேர்ந்து நாமும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
முப்படையினருக்கு திட்டமிட்ட வகையில் கூடுதல் அதிகாரம், அனுமதி ஆகியவற்றை வழங்கி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்த ரணில் விக்கிரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியை துறக்க வேண்டும்.
அவசர கால சட்டத்தின் கொடூரங்களை காலம் காலமாக அனுபவித்தவர்கள் தமிழர்கள், தமிழர்களை அவ்விதம் அடக்கி ஆண்டுவந்த அனுபவத்தை சிங்கள பெரும்பான்மை மக்கள் மீது பிரயோகித்து வெற்றி காண முற்பட்டு உள்ளார்கள்.
நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மாத்திரமன்றி உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் படையினரின் பேயாட்டத்துக்கு உட்பட்டு பாரதூரமாக பாதிக்கப்பட நேர்ந்ததையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எச்சரிக்கை
நாட்டின் தலைவர் என்கிற வகையிலும், பாதுகாப்பு அமைச்சர் என்கிற வகையிலும் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்று ரணில் விக்கிரமசிங்க பதவி விலக தவறினால் அவருக்கு எதிரான சூறாவளி போராட்டம் தொடரும்.
யானையின் கால்களில் சிக்கிய எறும்புகளாக போராட்டக்காரர்களை நினைக்க வேண்டாம். கோட்டாவுக்கு ஏற்பட்ட நிர்கதிதான் ரணிலுக்கும் நேரும் என்பது விதி.
பதவி ஏற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன்பாகவே சர்வாதிகாரியாக நடந்த ரணிலை நாட்டு மக்களும், நாமும், போராட்டக்காரர்களும் நம்பி நடப்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களில் தீர்வு வேண்டும் - ஜனாதிபதியிடம் கோரிக்கை |