இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது
நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் வெளியான தகவல்
சந்தேகநபர்கள் நான்கு பேரும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இவ்வாறானதொரு கைது நடவடிக்கை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியை நடத்திய முக்கிய சந்தேகநபரால், நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.