முன்னாள் கிரிக்கட் வீரருக்கு எதிராக வழக்கு தொடர தயாராகும் ரணில்
முன்னாள் கிரிக்கட் வீரரும், முன்னணி போட்டி மத்தியஸ்தருமான ரொஸான் மஹானாமவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஹானம அண்மையில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டிருந்தார்.
இந்த நூலில் உள்ளடக்கப்பட்டிருந்த சில விடயங்கள் தம்மை அவதூறு செய்யும் வகையில் அமைந்துள்ளது என ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மஹானாமவிற்கு சட்டத்தரணி ஊடாக நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்பி வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டில் பிரதமராக பதவி வகித்த ரணில், அப்போதைய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரான ஹேமக அமரசூரியவை சர்வதேச கிரிக்கட் பேரவை கூட்டத்திற்கு அனுப்பாது, கிரிக்கட் சபையில் அங்கம் வகிக்காத திலங்க சுமதிபாலவை அனுப்ப நடவடிக்கை எடுத்தார் என மஹானாம தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இவ்வாறு செயற்படவில்லை எனவும், இந்த கருத்து பிழையானது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.