ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடவே மாட்டார்கள்: எதிரணியின் குற்றச்சாட்டுக்கு சசீந்திர பதிலடி
நாட்டின் பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடவே மாட்டார்கள் என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச(Shasheendra Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பசில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளார் என்று எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"பசில் ராஜபக்சவுக்கு எதிராக இதற்கு முன்னரும் இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறைகூறுவதற்கு ஒன்றுமில்லாததால்தான் எதிரணிகள் பசில் விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளன. இது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு.
பசில் ராஜபக்ச சிறப்பாகச் செயற்படக்கூடியவர். அவரும் மனிதர். தனிப்பட்ட தேவைகள் இருக்கலாம். அதற்காக அவர் அமெரிக்கா சென்றிருக்கலாம். மீண்டும் வருவார். தப்பியோடுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர்" என தெரிவித்துள்ளார்.