நாட்டில் போராட்டங்கள் வெடிக்க காரணம் இதுவே..! அநுரவின் கேள்விகளுக்கு பதிலடிக் கொடுத்த டக்ளஸ்
ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அந்தந்தக் காலச் சூழல்கள் தான் இளைஞர்களிடம் அது திணிக்கப்பட்டுள்ளது என டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் கொழும்பில் நடந்து முடிந்த தேசிய வீரர்கள் தின விழாவில் ஜனாதிபதி பேசிய கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பருவநிலை மாற்றம் ஒரு வாழ்வாதார அச்சுறுத்தல்: சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஐநா பொதுச்சபை ஆதரவு
ஆயுதப் போராட்டம்
இவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களாக இருந்தாலும் சரி சிங்கள மக்களாக இருந்தாலும் சரி ஆட்சியாளர்களின் அனுமதியுடன் தமக்கான அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. மாறாக, அந்தந்தக் காலச் சூழல்களில் அந்தந்த மக்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தத்தினாலேயே தான் ஆயுதப் போராட்டம் இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளில் ஒருவன் என்ற அடிப்படையில் இந்த கருத்தை கூறுகின்றேன்.

அதேவேளை, தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தாங்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளத்தைக் கைவிட தயாராக இருக்கவில்லை.
தமிழர்களாகவும் அதேநேரம் இலங்கையர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களது அபிலாசையாக இருக்கின்றது.
அந்தவகையில், இன்று முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இன்னொரு முறை தமிழர்கள் அவ்வாறானதொரு ஆயுதப் போராட்டத்தை சிந்திக்கக் கூட மாட்டார்கள் என நான் கூறுகின்றேன்.
அநுர அரசு
அதேநேரத்தில், அநுரவிற்கு இருக்கக் கூடிய அனுபவங்களைக் கொண்டு அவர் இனிமேல் அவ்வாறான யுத்தம் ஒன்று நடைபெற இடமளிக்கமாட்டேன் என்று கூறியிருக்கின்றார். அது நல்ல விடயம். இவ்வாறான சூழலில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கக் கூடிய வகையில் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் அவர் முயற்சிக்க வேண்டும்.

நாம் நீண்டகாலமாக சொல்லிவரும் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அதை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கொண்டுள்ள இந்த அநுர அரசு அதற்கான ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்தி எமது மக்களின் அபிலாசைகளையாவது தீர்த்துவைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கான தீர்வு
இதேவேளை, நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன.
இந்த பிரச்சினை இன்று மட்டுமல்ல அல்ல எமது ஆட்சிக் காலத்திலும் இருந்தது. ஆனாலும் அன்று இவ்வாறான பிரச்சினைகள் வந்தபோது நாம் ஏதோ ஒரு வகையில் உடனடியான தீர்வுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.
தற்போது நெடுத்தீவின் போக்குவரத்து சேவையானது குமுதினி, வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய மூன்று படகுகளின் மூலம் மேற்கொண்டுவருகின்றது. ஆனால் அவை மூன்றும் தற்போது பழுதடைந்துள்ளமையினால் அந்த படகுகளில் திருத்த வேளைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, நெடுந்தீவின் போக்குவரத்து சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக எமது ஆட்சிக் காலத்தில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்சினை, துறைசார் தரப்பினருடன் ஆராயப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையே தமக்கான கடமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அவர்கள் அதை ஏற்று இலவசமான போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வந்திருந்தனர்.
ஆனாலும் இன்று குறித்த மூன்று படகுகளும் பழுதடைந்து செயற்பாடற்று இருப்பதால் மாற்று வழியின்றி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடன் உதவி
இந்தக் கடற்பரப்பில் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள படகொன்றை வாடகைக்கு அமர்த்தி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
அத்துடன் கடந்த காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் நான் நினைவூட்டுகின்றேன். அதேபோன்று, கூட்டுறவுச் சங்கமும் “தேவா ரதம்” என்ற ஒரு படகை வைத்திருந்தது. அதுவும் தற்போது பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றது.

எனவே கொழும்பிலுள்ள தேசிய கூட்டுறவு சபையிடம் பரிந்துரை செய்து குறித்த படகை திருத்துவதற்கான ஒரு கடனுதவியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.
அத்துடன், குறித்த கடனுதவியானது நெடுந்தீவு கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமல்லாது தீவக பகுதியில் இருக்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கிடைக்கத்தக்க வகையில் நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
தற்பொழுது மக்கள் உணவு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதால் தேசிய கூட்டுறவு சபையுடன் கதைத்து தீவக கூட்டுறவு சங்கங்களுக்கு இலகு கடன் கிடைக்கச் செய்வதனூடாக மக்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இலகுவாக கிடைக்க செய்ய முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.