இருளில் நடந்த ரகசிய சந்திப்பு..! சந்தித்தது மொஜ்தபா கமெனிதானா என ஈரான் ஜனாதிபதிக்கு சந்தேகம்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இருளில் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சந்தித்ததாக Iran International வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
அந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், மொஜ்தபா கமெனியின் பாதுகாப்பு அதிகாரிகள் பெசெஷ்கியானுக்கு கை குலுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மொஜ்தபா கமெனி
இருள் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத சூழல் இருந்ததால், பின்னர் "நான் பேசியவர் உண்மையில் மொஜ்தபா கமெனிதானா?" என்று ஜனாதிபதி தனது அலுவலகத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்காக பெசெஷ்கியான் பலமுறை கோரிக்கை வைத்ததுடன், பதவி விலகுவதாக எச்சரித்த பிறகே காமெனியின் அலுவலகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல் உச்சத் தலைவரின் இல்லத்தில் அல்லாமல், ரகசிய இடத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கடந்த மே மாதத்தில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, மொஜ்தபா கமெனியுடன் இரண்டரை மணி நேரம் "நட்பான சூழலில்" பேச்சுவார்த்தை நடத்தியதாக பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.
இறுதி எச்சரிக்கை
இதற்கிடையில், மொஜ்தபா கமெனியுடன் தொடர்பு கொள்வது தற்போது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இருப்பினும் அவரது இருப்பு நாட்டுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முடிவுகளில் தனது அரசு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, பெசெஷ்கியான் மே மாதத்தில் பதவி விலக முயன்றதாகவும், அதற்கு பதிலாக மொஜ்தபா கமெனி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, தனது தந்தை அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து பதவியேற்ற மொஜ்தபா காமெனி கடந்த ஐந்து மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்றும், எழுத்து மூலமான அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணப் புறக்கணிப்பு தொடரும்: ஃபிஃபா தலைவரின் முடிவை நிராகரித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்