கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: ஊதியம் கோரி சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்திப் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இட்டுரி மாகாணத்தின் புனியா நகரில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட சுகாதாரப் பணியாளர்கள் வியாழக்கிழமை இந்த எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.
சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்
கடந்த மே மாதம் நடுப்பகுதியில் எபோலா தொற்று பரவத் தொடங்கியது முதல் தமக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டில் பதிவாகும் மொத்த எபோலா தொற்றாளர்களில் சுமார் 90 சதவீதமானோர் இட்டுரி மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, இதுவரை 3,973 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 1,801 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 674 நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
கிளர்ச்சிக் குழுக்களின் மோதல்கள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கான போக்குவரத்து வசதியின்மை என்பன தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.
சுகாதாரப் பணியாளர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பு நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் தொற்றாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் கடுமையாகப் பாதிக்கும் எனக் கவலை வெளியி்ட்டுள்ள சர்வதேச நிவாரண அமைப்புகள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தியுள்ளன.