சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!
சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஒருவர், சம்பளத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் தொகையில், ஓய்வுபெற்ற பின் 'ஓய்வூதியப் பணம்' (Pension) மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.
ஆனால், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.
சுவிஸ் குடியுரிமை உள்ளவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும், ஆனால் வெறும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உரிய ஒப்பந்தம் இல்லாததால், அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகிறது.
இது சுமார் 10,000 முதல் 15,000 பேரைப் பாதிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் சுவிட்சர்லாந்தில் உள்ள சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும், விபரங்களைப் பகிர்ந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாக மாறினால் மட்டுமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து உரிமையைப் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...