அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் போராட்டம் முன்னெடுப்பு (Photos)
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர், யுவதிகள் ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் உள்ள பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை ஹட்டன் எம்.ஆர். நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்து, அதன்பின் ஊர்வலமாக வந்து மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே, பசிக்கு நிறம் மதம் கிடையாது, விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும், ரம்புக்கனை இளைஞனுக்கு நீதி வேண்டும், சிறார்களின் கல்வியை நாசம் செய்யாதே, போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளைக் காட்சிப்படுத்திய வண்ணம், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் ஹட்டன் - மல்லியப்பு சந்தியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தாகத்தோடு அனைவரும் அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிடி தளராதே, சமூக செயல்பாட்டு மன்றம், மலையக மக்கள் இயக்கம், மலையக இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இன்று இந்த போராட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து, அதன்பின் ஊர்வலமாக வந்து அட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், 200 வருட கூலித்தொழிலை இனியாவது சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்கு, சுபிட்சமான இலங்கையில் நாங்களும் இலங்கையர்களே, மலையக மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும், இனம், மதம் என பிரிக்க வேண்டாம் நாங்களும் இலங்கையர்களே, பட்டினியில் நாங்கள் பதவி வெறியில் நீங்கள் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளைக் காட்சிப்படுத்தினர்.
அத்தோடு, கறுப்பு பட்டிகளைத் தலையில் அணிந்திருந்ததோடு, கோஷங்களையும்
எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.








