சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு (Photos)
சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றையதினம் இடம்பெற்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
சிறுமி ஆயிஷாவிற்கு நீதி கோரி போராட்டம்
குறித்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பல நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்டப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
அட்டலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலையை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்
பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலையை கண்டித்து கிளிநொச்சியில் இன்று கண்டன போராட்டம் இடம்பெற்றது.
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்பக்க ஏ 9 வீதியில் வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினரால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பழைய கச்சேரியிலிருந்து பேரணியான புறப்பட்டு மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.








