பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய மக்கள் போராட்டம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலான ஊடக சந்திப்பு இன்று(26.2.2026)மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் முன்னெடுக்கப்பட உள்ளது.
மக்கள் போராட்டம்
அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோரத்தை உணர்ந்தவர்களாக இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த செல்வகுமார், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோர முகத்தை நன்கறிந்த இனமாக, அதன் பாதிப்புகளை முற்றுமுழுதாக அனுபவித்த இனமாக நாம் இருக்கின்றோம்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் குறித்த சட்டத்தினால் பாதிப்புற்று, எதிர்க்கட்சியில் இருக்கும் போது இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.
ஆனால் ஆட்சி பீடமேறியதும் மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் வழமையான சிங்கள பேரினவாத அரசுகள் போன்று தங்கள் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கோடு செய்பட்டு வருகின்றமையை அனைவரும் நன்கு அவதானித்திருப்பீர்கள்.
முற்றுமுழுதான எதிர்ப்பு
அதே வகையிலேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமலாக்குவோம் என்று ஆட்சி பீடமேறியவர்கள் தற்போது அதனை விட பயங்கரமான சரத்துக்களை உள்ளடக்கியதாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று முற்று முழுதாக மக்களை விடுத்து அரசாங்கத்தை காப்பாற்றும் முகமாக மனித உரிமைகளுக்கு எதிரான சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது.

இதனைப் பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் தமிழ் மக்களாகிய நாம் பாரிய எதிர்ப்பின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.
பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசு எவ்வாறாயினும் இதனை நிறைவேற்றியே தீரும் என்ற அடிப்படை இருந்தாலும் இதற்கு தமிழ் மக்களின் முற்றுமுழுதான எதிர்ப்பு இருந்தது என்பதை உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.