கச்சதீவு அந்தோனியார் திருவிழா தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவானது நாளையும் (27) நாளை மறுதினமும் (28) நடைபெறவுள்ள நிலையில் திருவிழா தொடர்பாக யாழ். மாவட்ட செயலகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
பக்தர்களுக்கான அறிவுறுத்தல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவானது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் நெடுந்தீவு, பிரதேச சபை நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் 2026.02.27 மற்றும் 2026.02.28 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது.

2026.02.27 ஆந் திகதி காலை 4.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும்.
கச்சதீவிற்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கான அறிவுறுத்தல்
வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன், 2026.02.27 ஆந் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ம் திகதி அன்று காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri