மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்து..! அரசின் காணி கையகப்படுத்தலுக்கு எதிராக கண்டனம் போராட்டம்
வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று 8ஆவது வாரமாகவும் தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பலாலி சந்தியில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், நீண்டகாலமாக தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.
காணி சுவீகரிப்பிற்கு எழும் கண்டனம்
“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாத காரணத்தால், குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது காணிகளை விடுவிப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி, இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே தங்களது பிரதான கோரிக்கை என தெரிவித்த மக்கள், எந்தவித வன்முறையுமின்றி அமைதியான முறையில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து, அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“நிலம் எங்களின் உரிமை; எங்கள் பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்ற கோரிக்கையுடன், 8ஆவது வாரமாகவும் பலாலி சந்தியில் மக்கள் தமது அமைதிவழிப் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

