வவுனியாவில் உதவி திட்ட மோசடிக்கு எதிராக மக்கள் முறைப்பாடு (Photos)
வவுனியாவில் பாரதிபுரத்தை சேர்ந்த மக்கள் உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து குறித்த மக்கள் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தின் முன்பாக இன்று (25.06.2023) ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் வருகை தந்து குறித்த மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா பாரதிபுரத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திலீபனின் தலையீடு
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு. திலீபன் அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் பெயர் விபரம் மற்றும் முறைப்பாட்டு கடிதங்களை எழுதி பிரதேச செயலாளரிடம் கையளிப்பதுடன் தன்னிடமும் பிரதியொன்றை தருமாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
