38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு
கல்விப்புலத்தில் 38 வருட கால அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிபர். இராமு பத்மாவதி அரச பாடசாலை பணிகளில் இருந்து இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார்.
கண்டி-புசல்லாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், மலையகக் கல்வித்துறையில் சுமார் 38 வருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி வந்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது நீண்டகால அரச பாடசாலைக் கல்விப் பணியிலிருந்து எதிர்வரும் 07.05.2026 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார்.
கல்விப் பயணத்தின் மைல்கற்கள்
கடந்த 1988 ஆகஸ்ட் 29 அன்று தனது முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்ட இவர், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்து கொண்டவராக திகழ்கிறார்.
கண்டி - புப்புரஸ்ஸ ஸ்டெலன்பர்க் தமிழ் வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தைப் பெற்று 03 ஆண்டுகள் (1988–1992) பணியாற்றினார். நுவரெலிய- கொட்டகலை, யதன்சைட் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1992 முதல் 1993 வரை இரண்டு ஆண்டுகள் முறையான ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.

பயிற்சியின் பின்னர் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஓராண்டு காலம் (1994–1995) பணியாற்றினார். புசல்லாவ - பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் நீண்டகாலச் சேவை புரிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிபர். இராமு பத்மாவதி தமது சேவைக்காலத்தில் மிக நீண்ட பணியை சுமார் 25 வருடங்களாக புசல்லாவ பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ந்துள்ளார்.
இந்த பாடசாலையில் 03 ஆண்டுகள் ஆசிரியையாகவும், இரண்டரை ஆண்டுகள் பதில் அதிபராகவும், 20ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றி, பாடசாலையின் பௌதீக மற்றும் கல்வி ரீதியான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்.
நிறைவுப் பணி
தனது சேவையின் இறுதிப் பகுதியாக புசல்லாவ ரொத்ஸ்சைல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2026 மே 07 வரை சுமார் 06 ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றி எதிர்வரும் 07.05.2026 தனது அரச பாடசாலை பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
பணியில் இருந்து ஓய்வுபெறும் அதிபர். இராமு பத்மாவதியின் எதிர்கால வாழ்வு சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.