மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி..! ஜனாதிபதி அநுர இன்று வெளியிடப் போகும் மிக முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு யுத்த நெருக்கடி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என சபையின் முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(07.04.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது குறித்த விவரங்களை இன்று(07) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரண பொதி வழங்க அங்கீகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தாக்கங்களுக்கு முகம் கொடுத்துள்ள வறிய மக்களுக்கு நலன்புரிச் சேவைகளை வழங்குவதற்காக, அமைச்சர் உபாலி பண்ணிலகே தலைமையில் ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட புதிய நிவாரணப் பொதிக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நிவாரணப் பொதி தொடர்பான முழுமையான விவரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் புத்தாண்டு கால நிவாரணங்கள் குறித்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.