தேசிய மக்கள் சக்தியும் தமது வன்முகத்தை காட்டி நிற்கின்றது - மா.சத்திவேல்
அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(03.08.2026) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றம் எனும் தொனியோடு ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல் நடத்துபவர்களையும் அந்த நினைவுகளில் வளவாளர்களாக கலந்து கொள்பவர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வருகிறது.
இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாட்டினை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றது.

கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் முள்ளிவாய்க்கால் நிறைவேந்தலை இனவாத கும்பல்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தெற்கில் நடத்தி வருகின்றது.
அந்த வகையில் கடந்த வருடம் (2025) நீர்கொழும்பில் நினைவேந்தல் நடத்திய போது இனவாத கும்பல் எதிர்ப்பினை நிகழ்த்த திரண்டதோடு நிகழ்வுக்குள் பொலிசாரும் நுழைந்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நினைவேந்தலை ஒழுங்கு செய்த கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அருட் சகோதரி ஒருவரும், அருட்தந்தை ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அரச பயங்கரவாதம்
இது எமது அமைப்புக்கு விடுக்கப்பட்ட இனவாத அடக்குமுறை அச்சுறுத்தலாகவே கருதுகின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது அந்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட பன்னாட்டு குற்றங்கள் நூலின் ஆசிரியர் சிரிஞானேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர்(CTID)அழைத்திருப்பது அச்சுறுத்தலின் அடுத்த கட்டம் எனலாம்.
தெற்கில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராக 1971 மற்றும் 1988களில் நிகழ்த்திய கிளர்ச்சியினை அடக்க அரச பயங்கரவாதம் திட்டமிட்ட வகையில் சித்திரவதை முகாம்களுக்குள் பெருந்தொகையான இளைஞர்களை சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலைகளை செய்தது மட்டுமல்ல சமூக புதைகளுக்குள்ளும் தள்ளியது.

இத்தகைய கிளர்ச்சி இனியும் நிகழாதிருக்க வடக்கு கிழக்கின் அரசியல் எழுச்சியை பயங்கரவாதமாகவும், பிரிவின வாதமாகவும், தேசத்துரோகமாகவும் அடையாளப்படுத்தி சிங்கள இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்கள் கைகளில் ஆயுதத்தை திணித்து இன அழிப்பையும் இனப்படுகொலையையும் அரங்கேற்றி வெற்றி கொண்டாட்டம் நடத்துகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை தெற்கில் நடத்துவதன் மூலம் அரச பயங்கரத்தின் முகம் வெளிப்பட்டு விடும். வடக்கின் மக்கள் நீதி குரல் எழுப்புவது போல தெற்கின் மக்களும் நீதி குரல் எழுப்புவர் என தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயப்படுகின்றது.
முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னால் இருக்கின்ற முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்துவதை தடை செய்வதன் ஓர் அங்கமாகவே தற்போது பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை முடுக்கி விடுகின்றனர்.
இந்நிலையில் தெற்கின் முற்போக்கு சக்திகள் கடந்த கால அரச பயங்கரவாதத்தின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய சித்திரவதை முகாம்கள், சமூக புதை குழிகள் என்பவற்றுக்கான நீதியைத் தேடும் முகமாக மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தால் மட்டுமே வடக்கில் அரச பயங்கரவாதத்தின் முகத்தினையும் அது நிகழ்த்திய கொடூரத்தையும்தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அத்தோடு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
இன்று கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எடுக்கும் அடக்குமுறை செயற்பாடுகள் தெற்கில் ஏனைய அமைப்புக்களுக்கு எதிராகவும் அது விரிவடையும் என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம் என குறிப்பிட்ப்பட்டுள்ளது.