மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அரசுக்கே ஆபத்து! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையே மின்சாரக் கட்டண அதிகரிப்புக்குக் காரணமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் கட்டணங்களை உயர்த்த அரசு முற்பட்டால், அது தற்போதைய ஆட்சியாளர்களின் இருப்புக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தரமான நிலக்கரி
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், தரமான நிலக்கரி கொண்டு வரப்பட்டிருந்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.
தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய நிறுவனங்களுக்கு எதிராகத் தண்டப்பணம் விதிக்கக் கூடாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுவது வேடிக்கையானது.
அவ்வாறு தண்டப்பணம் விதித்தால் அந்நிறுவனங்கள் விநியோகத்தை நிறுத்திவிடும் என அவர் கூறுவது, திருட்டுச் செயலுக்குப் பகிரங்கமாக ஆதரவளிப்பதாகும். தவறு செய்த நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க அஞ்சும் அரசின் செயற்பாடு பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

இரகசிய உடன்பாடுகள்
குறித்த நிறுவனங்களுடன் அரசுக்கு ஏதேனும் இரகசிய உடன்பாடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான முறையற்ற நிர்வாகத்தினாலேயே இன்று மக்கள் மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஒரு மின்சாரக் கட்டண அதிகரிப்பை மக்கள் மீது சுமத்த அரசு திட்டமிட்டால், அது அரசுக்கு எதிரான மக்களின் பாரிய எழுச்சிக்கு வழிவகுக்கும். இது அரசின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றார்.