பிரதேச சபையின் ஊழியர்களை கடமை நேரத்தில் வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!
மானிப்பாய் பிரதேச சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் இருவரை அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு வர்ணம் பூச அழைத்துச் சென்றதாக மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றையதினம்(15.6.2026) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடமை நேரத்தில், இரண்டு ஊழியர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்று, கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த உத்தியோகத்தர் இவ்வாறு வர்ணம் பூசுவித்துள்ளார்.
விசாரணை
இது குறித்து நான் அந்த ஊழியர்களை தொடர்புகொண்டு வினவியபோது அவர்கள் அதனை ஒத்துக் கொண்டுள்ளனர்.மேலும் தாங்கள் இவ்வாறு பல தடவைகள் வற்புறுத்தலின் பேரில் அவரது வீட்டு தனிப்பட்ட வேலைகள் செய்ததாகவும், இதற்கு தமக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

எனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விரைந்து, மானிப்பாய் பிரதேச சபையின் மீது இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது.
ஊழலை ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதனை வேடிக்கை பார்க்கிறதா.எனவே அவர்கள் கூறியது உண்மை என்றால் இது குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விரைந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டு
இதேவேளை, மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வார இறுதி விடுமுறை தினங்களில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர், அவரது சாரதியுடன் பிரதேச சபையின் வாகனத்தை எடுத்துச் சென்று சாரத்தியம் பழகியுள்ளார்.
இது ஒரு ஊழல் செயற்பாடாகும். தவிசாளர் சாரத்தியம் பழக வேண்டும் என்றால் சாரதி பயிற்சி பாடசாலைகள் உள்ளன. அங்கு பயிற்சி பெறலாம்.
வரிப்பணம் வீண் விரயம்
ஆனால் இவ்வாறு பிரதேச சபையின் வாகனத்தை விடுமுறை தினங்களில் பயன்படுத்தி ஊழல் புரிந்துள்ளார். இதன்போது மக்களது வரிப்பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதாக வந்த தேசிய மக்கள் சக்தி அரசுக்கு இது ஒரு ஊழலாக தெரியவில்லையா, கடந்த காலங்களில் சனி, ஞாயிறு தினங்களில் வாகனம் பிரதேச சபையில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறது, எத்தனை மணிக்கு திரும்பி வருகிறது போன்ற சிசிடிவி காட்சிகளை விசாரணை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்