பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது! பரீட்சையை ஒத்திவையுங்கள் - கல்வி அமைச்சிடம் கோரிக்கை
எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் தயாராகுவதற்கும் போதிய கால அவகாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (16.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளதால், க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பது கடுமையான போட்டித் தன்மையைக் கொண்ட ஒன்றாக மாறியுள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கால அவகாசம்
எனவே, கல்வி அமைச்சு இந்த விவகாரத்தை மிகவும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். கடந்த 2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய 27 முதல் 31 மாதங்கள் வரை அவகாசம் இருந்த போதிலும், 2026 மாணவர்களுக்கு வெறும் 21 மாதங்களே கிடைத்துள்ளன. நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் இன்னும் பாடத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை.
பாடத்திட்டங்களை மாத்திரம் அவசரமாக முடிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களுக்கு முகங்கொடுக்கவும் சுய கற்றலுக்கும் போதிய நேரம் தேவை. அத்துடன், 'டித்வா' சூறாவளிப் பேரழிவு காரணமாக மாணவர்கள் தமது பாடக்குறிப்புப் புத்தகங்களை இழந்துள்ளனர். முதல் முறை பரீட்சை எழுதுபவர்கள் மட்டுமன்றி, 2ஆம் மற்றும் 3ஆம் முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் இம்முறை முடிவுகள் வெளியானதில் இருந்து பரீட்சைக்கான கால இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே, பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோருகின்றோம். இதனை நாம் அரசியல் லாபத்திற்காகக் கூறவில்லை. பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையையே முன்வைக்கின்றோம். 'டித்வா' சூறாவளியினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்பீடுகள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.
நாடு தழுவிய ரீதியில் 25 சதவீதமானோருக்கே இழப்பீடு கிடைத்துள்ளதுடன், பெருமளவு பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் வெறும் 2 - 3 சதவீதமானோருக்கே உதவி கிடைத்துள்ளது. வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 6 மாதக் கொடுப்பனவு முடிவடைந்துள்ள நிலையில், அவர்களின் அடுத்தகட்ட நகர்வு கேள்விக்குறியாகியுள்ளது. இது அரசின் பலவீனமான முகாமைத்துவத்தைக் காட்டுகின்றது.

மக்கள் அவதி
மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதியுறுகின்றனர். அத்தியாவசியப் பொருள்களுக்கான வற் வரியை நீக்குவதாகக் கூறிய அரசு அதனை இன்னும் செய்யவில்லை. பொக்கிஷம் நிரம்பியுள்ளதாகக் கூறும் அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது தொடர்பாக 7 அம்சங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையைப் பேராயர் மற்றும் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.
அந்த வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் உண்மைகளைக் கண்டறிந்திருக்கலாம் என்பதால், இப்போதும் இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு என்பதால், இது குறித்த பேச்சுகள் இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாகாண சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ள போதிலும், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தமது கட்சி தயாராகவே உள்ளது என்றார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan