துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தனி நாட்டை உருவாக்கும்!
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தனி நாட்டை உருவாக்கும் என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த புதிய சட்ட மூலத்தின் மூலம் புதிய நாடு ஒன்று உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்ககளின் கைகளில் நாட்டின் இறைமையை தாரைவார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர் அந்தப் பகுதியை ஆட்சி செய்யும் பூரண அதிகாரம் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்ட மூலத்தில் 70 சரத்துக்கள் காணப்பட்ட போதிலும் அதில் நாடாளுமன்றிற்கு காணப்படும் அதிகாரம், நில உரிமை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்குள் துறைமுக நகரம் ஒர் தனிநாடாகவே இயங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனையை ஆய்வு செய்ய போதுமான நேரம் வழங்கப்படவில்லை!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனையை ஆய்வு செய்வதற்கும் விவாதிப்பதற்கும் வழங்கப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசம் குறித்து இலங்கையின் சட்டத்தரணிகள் சம்மேளனம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சம்மேளனம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
கொழும்பு துறைமுக ஆணைக்குழு தொடர்பான இடைக்கால அறிக்கையில் இந்த யோசனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை உருவாக்கும் ஆற்றல் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த யோசனை தொடர்பில் ஆலோசனை செயல்முறை, வெளிப்படைத்தன்மை தொடர்பில் போதுமான நேரம் வழங்கப்படவில்லை.
மேலும், துறைமுக நகர திட்ட நிறுவனம் தொடர்பான தகவல்கள், அரசாங்கத்திற்கும் திட்ட நிறுவனத்திற்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நிலப்பரப்பின் நிர்வாக அமைப்பு தொடர்பான தகவல்கள் யோசனையின் மூலம் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.
அதன்படி, யோசனையின் சில விதிகள் அரசியலமைப்பின் விதிகள் 1,2,3,4,12,14 மற்றும் 76 போன்றவற்றுடன் பொருந்தாது என்று சட்டத்தரணிகள் சம்மேளனம்
சுட்டிக்காட்டியுள்ளது.