கொழும்பில் 25 அமைச்சர் பங்களாக்கள் பாழடையும் நிலையில்...
கொழும்பில் விசேட வசதிகளைக் கொண்ட 25 அமைச்சர் பங்களாக்கள், எந்தவொரு பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படாமல் கடந்த இரண்டு வருட காலமாக மூடி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக இவை பாழடைந்த நிலைக்குச் சென்று கொண்டிருப்பதுடன், இன்னும் நீண்ட காலத்திற்கு இவ்வாறு மூடி வைக்கப்பட்டிருந்தால் பெருமளவில் அழிவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இந்த அமைச்சர் பங்களாக்களை முதலீட்டுத் திட்டங்கள், வீடுகள், தூதரக அலுவலகங்கள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்காக ஒதுக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை அனுமதி கோரல்
அமைச்சர் பங்களாக்கள் 16ஐ பொருளாதார ரீதியாகப் பயனுள்ள மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீட்டுத் திட்டங்களுக்கும், ஒன்பது பங்களாக்களைத் தூதரக அலுவலகங்கள், வீடுகள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்காக ஒதுக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து தூதரக அலுவலகங்களை நடத்திச் செல்வதற்காக ஏற்கனவே அமைச்சர் பங்களாக்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பங்களாக்களைக் கையளிக்கும் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக வழிகாட்டல் குழு ஒன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்தார். சில அமைச்சர் பங்களாக்கள் அமைந்துள்ள பிரதேசங்களின் அடிப்படையில், அவற்றை வீடுகள் அல்லது சாதாரண அலுவலகங்களாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கிறது.
நான்கு அமைச்சர் பங்களாக்கள் தற்போது விசேட நீதிமன்றங்களுக்காகவும், ஒரு பங்களா இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.