தோட்ட பங்களா ஒன்றை பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டுள்ள வடக்கு அரசியல்வாதி
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஒருவர், மத்திய மலைநாட்டின் பெருந்தோட்ட முகாமைத்துவமொன்றுக்கு உரித்தான தோட்ட பங்களா ஒன்றை பலவந்தமாக கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான கரோலினா தோட்டம், தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை
அதன் வெளிக்கள அதிகாரி தங்கியிருந்த பங்களா ஒன்றையே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
குறித்த கரோலினா தோட்டத்தை அண்மித்த காணித் துண்டொன்று தொடர்பில் வடக்கு முன்னாள் முதலமைச்சர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்தக் காணித்துண்டுக்கு உரிய இடம் என்று உரிமை கோரியே மேற்குறித்த பெருந்தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரின் பங்களாவையும் அவர் கைப்பற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு இது தொடர்பான விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.
