கோட்டாபயவின் மீள் அரசியல் பிரவேசம்! பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பிலும், தமது எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதுவரை தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வந்தடைந்தார் கோட்டாபய ராஜபக்ச
மேலும், கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும் இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு யாரோ அவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து சில அமைச்சர்கள் கோட்டாபய ராஜபக்சவை விமான நிலையத்திற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டாபய ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார்.
மௌனம் காக்கும் ராஜபக்சக்கள்
இதேவேளை, நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று காலை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 இற்கும் மேற்பட்டோர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பினையும் ராஜபக்சக்கள் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



