ஐஸ் போதைப் பொருளுடன் கிருளப்பனை பொலிஸ் நிலையத்தின் அதிகாரி கைது
ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தும்மல்லசூரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப்பிரிவின் அதிகாரிக்கு கிடைத்த தகவல்
தும்மல்லசூரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சேவையில் இருந்த ஓய்வுபெற்று தும்மல்லசூரிய ஹேனேகெதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரும், கொழும்பு கிருளப்பனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் அதிகாரியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர்களிடம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் ஹேஸ் போதைப் பொருளும் இருந்துள்ளன. கிருளப்பனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியிடம் இருந்த சந்தேகத்திற்குரிய இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்த கார் மற்றும் அவர் குளிப்பிட்டிய பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர். இவர்களுக்கு போதைப் பொருள் கிடைத்த விதம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தும்மல்லசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸார் மத்தியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் இருப்பது பாரதூரமான நிலைமை
இலங்கையில் அண்மைய காலமாக ஹெரோயின், ஐஸ் உட்பட ஆபத்தான போதைப் பொருட்களுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
பொலிஸ் திணைக்களத்தில் பணிப்புரியும் பொலிஸார் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பரவல் மற்றும் பாவனையை தடுப்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொலிஸார் மத்தியில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் இருப்பது பாரதூரமான நிலைமை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.