யாழில் எரிபொருள் நிலைய ஊழியர்களை அச்சுறுத்திய இளைஞர்
யாழ்ப்பாணம்- அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வலி. கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இளைஞரின் அச்சுறுத்துல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வலி. கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் அச்சுவேலியில் அமைந்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அச்சுவேலியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தினமும் வந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருக்கும் ஊழியர்களை அச்சுறுத்தி வந்துள்ளார்.
குறித்த நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தியும், எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பியும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வாறான பல செயற்பாடுகளில் குறித்த இளைஞர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து ஊழியர்களை தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளார்.
மேலும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் காணொளி பதிவுகளை மேற்கொண்டு அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
பொலிஸ் முறைப்பாடு
இந்த சம்பவங்களின் அடிப்படையில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடும் சிலர், அங்கு வேண்டும் என்றே குழப்பங்களை ஏற்படுத்தி எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ள முடியாத அளவுக்கு தடையாக உள்ளனர்.
இதனால் எரிபொருள் பெற வருவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற விதங்களில் ஒன்று கூடுபவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய எரிபொருள் QR அட்டை : பதிவுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் |