28 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - சூத்திரதாரியை எச்சரித்த அமைச்சர்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் இனி எமது ஆட்சியில் நடக்கக் கூடாது என்றும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைக்குள் நடந்த கொடூரங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். வறுமை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு கல்வி பின்தங்கியிருக்கும். இவ்வாறு வறுமையும் கல்வியறிவும் பின்தங்கியுள்ள இடங்களில் வன்முறைக் கலாசாரம் தலைதூக்கும்.

இதனால் தான், எமது அரசாங்கம் நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மக்களை வறுமையிலிருந்து விடுவித்தால், அவர்கள் கல்வியில் எழுச்சி பெறுவார்கள், தவறான கலாசாரமும் முடிவுக்கு வரும். சிறைக் கைதிகளும் மனிதர்களே, இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்த இடத்தில் ஏன் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எமது இளைஞர்களைப் போதைப்பொருள் வியாபாரிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாற்றிய அவதூறான அரசியலை முன்னெடுத்தவர்கள் யார்? கடந்த கால ஆட்சியாளர்களே இப்படியான கலாசாரத்தைக் கொண்டு வந்தனர். யாழ்ப்பாணம் என்பது கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாகக் கொடிகட்டிப் பறந்த இடமாகும்.
ஆனால், இன்று அங்கு போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முன்னாள் அரசியல்வாதிகளின் சதியே இது?
தற்போது நாடு தழுவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக இன்னும் பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கடந்த 1983ஆம் ஆண்டில் குட்டிமணி உட்பட 53 தமிழ்க் கைதிகள் இரண்டு நாட்களாகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனாலும், சுயநலமிக்க அரசியல்வாதிகள் பழைய கலாசாரத்தையே விரும்புகின்றனர்.
நீர்கொழும்பு சம்பவம் அதன் ஓர் அங்கமாக இருக்குமா? என்ற சந்தேகமும் எழுகின்றது. எமது ஆட்சியில் நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் போன்றதொரு சம்பவம் இடம்பெற்றிருக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவங்களுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம்! சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்