மக்களை திசை திருப்பும் நோக்கில் 13ம் திருத்த சட்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது – ஜே.வி.பி.
13ம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அளித்த உறுதிமொழியானது மக்களை திசை திருப்பும் நோக்கிலானது என ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வழங்கிய உறுதி மொழியானது, பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க கூடாது என்பதற்காகவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே 13ம் திருத்தச் சட்டம் பற்றிய பேச்சினை ஆரம்பித்தார் எனவும் வேறு எவரும் இது பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார பிரச்சினை
நாட்டு மக்கள் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்தே பேசி வருகின்றனர் எனவும், இந்த இனவாத சதி வலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ரணில் திட்டமிட்ட அடிப்படையில் தடுத்து வருகின்றார் எனவும், அது பணமில்லாத காரணத்தினால் அல்ல எனவும் மக்களின் வாக்குகளை பெற முடியாத காரணத்தினால் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரச உத்தியோகத்தர்கள் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யக் கூடாது என்ற ரணிலின் உத்தரவு தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில் தேர்தல் ஆணைக்குழு கடன் அடிப்படையில் கொள்வனவுகளை செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் தற்பொழுது தேர்தல் இடைநிறுத்தப்பட்டால் அது பண விரயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
