எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் உள்ளிட்டோர் மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த கலந்துரையாடல்
ஊர்காவற்துறை எரிபொருள் நிலைய ஊழியரும், முகாமையாளரும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டமை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். தீவக வைத்தியசாலைகளுக்கான கிளை சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலைய ஊழியர்
அந்த அறிக்கையில் மேலும், எரிபொருள் நிலைய ஊழியர் வைத்தியசாலை ஊழியர்களை மரியாதைக் குறைவாக பேசும் பண்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவரை மாற்ற வேண்டும் என்று எமது சங்கத்தின் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சமூகத்தில் எரிபொருள் வழங்குத்தலை காட்டிலும் மருத்துவர்களின் கண்ணியம் முக்கியமாகும்.
எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்! |
சுகாதார சேவையானது அத்தியாவசிய சேவை என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சானது சுற்றுநிரூபங்கள் வழங்கி ஒவ்வொரு மாகாணத்திற்கும் பொறுப்பான ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தமது பிரதேச அரச அதிகாரிகள் மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பத்து சதவீதத்தை சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இருப்பின்னும் கடந்த மூன்று மாதங்களாக குறித்த ஒரு எரிபொருள் நிலைய ஊழியர் மட்டும் எரிபொருள் பெற்றுக்கொள்ள செல்லும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை வார்த்தைகளால் மரியாதை குறைவாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
முறைப்பாடுகள்
எரிபொருள் விநியோகிக்கும் நிலையில் எரிபொருளை வழங்க மறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. இது தொடர்பாக ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளருக்கு ஊர்காவற்துறை வைத்தியசாலை அத்தியட்சகர் பலமுறை முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கைகள் அந்த எரிபொருள் நிலைய ஊழியர் எதிராக இதுவரை எடுக்கப்படவில்லை.
கடந்த மாதம் ஊர்க்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று மறுத்து அவரை கடுமையாக பேசி அவமானப்படுத்தியதோடு மட்டுமன்றி அவரை தாக்கும் வகையில் பாசாங்கு செய்ததாக அவ்வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.
இருந்த போதிலும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தரப்பினர் எரிபொருள் நிலைய ஊழியர் மீதான உள்ளக விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
விசாரணை
அது முடியும் வரை அவரை வேறு சில பதவிகளுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது எமக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.
ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்க குழு உள்ளக விசாரணை செய்ய அவர்களுக்கு நேரம் தேவைப்படுவதாக கூறியதாலும் அக்கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்படாமையாலும் எமது சங்கத்தின் அதிகாரிகள் ஒரு மாத கால நீண்ட அவகாசத்தை அவர்களுக்கு வழங்கினர்.
செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் உள்ளக விசாரணையை முடித்து எரிபொருள் நிரப்பு
நிலைய ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் யாழ்ப்பாணத்
தீவக மருத்துவமனைகளில் இப்பெட்ரோல் நிலையம் மூலமாக எரிபொருளை
பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலைகளான ஊர்காவற்துறை, வேலணை மற்றும் காரைநகர்
வைத்தியசாலைகள் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தொழிற்சங்க நடவடிக்கைக்கு
செல்வதை தவிர்க்க முடியாததாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.