அமெரிக்காவில் பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கிச் சூடு - பலர் உயிரிழப்பு
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் - பஃபலோ நகரின் ஜெபர்சன் வீதியில் அமைந்துள்ள சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள் இன்று பிற்பகல் (உள்ளூர் நேரம்) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் சுடப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலைமைகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இந்நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பல்பொருள் அங்காடியானது, பஃபேலோ நகரத்திற்கு வடக்கே சுமார் 3 மைல் (5 கிலோமீட்டர்) தொலைவில், கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளது.