இரவு நேரத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை
மட்டக்களப்பு காத்தான்குடியில் புதன்கிழமை இரவு 11மணிக்குப் பின்னர் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 36 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதாக காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாரின் உதவியுடன் காத்தான்குடி பிரதான வீதியின் குட்வின் சந்தியில் இந்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
முகக் கவசம் அணியாமல் வீதியினால் சென்றவர்களுக்கே இதன் போது பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீலின் வழிகாட்டலிலும் அவரின் தலைமையிலும் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.றஹ்மத்துல்லாஹ், கருணாகரன், செனவிரட்ன ஆகியோரினால் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறும் நடவடிக்கை இடம்பெற்றன.
இதன் போது 36 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டதாகவும் இவைகள் பி.சி.ஆர்
பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய
அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தெரிவித்துள்ளார்.