ராஜபக்சர்களின் திட்டம் தொடர்பில் யாழில் வைத்து சம்பிக்க வெளியிட்டுள்ள தகவல்
யாழ்ப்பாணத்தில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று காலை 9 மணி அளவில் யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையம் பகுதிக்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதுடன், 43 படையணியின் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்.
ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகிய பின்னர் சம்பிக்க ரணவக்க புத்திஜீவிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அமைப்பே 43 படையணி ஆகும்.
அத்துடன் தான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் நெடுந்தூர பேருந்து நிலையம், யாழ்ப்பாண மாநகரசபை புதிய கட்டடம் போன்றவற்றைப் பார்வையிட்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் நெடுந்தூர புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் பாவனைக்கு வராமல் இருப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வட பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தூர இடங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையம், யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
ராஜபக்சர்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள். மக்கள் நலன் சார்ந்து செய்யப்பட மாட்டார்கள் என்பதே உண்மை.
நான் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன். தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கி மக்கள் சார்ந்த திட்டங்களை முன்னெடுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




