நாளைய தினம் பதவி துறக்கவுள்ள எம்.பி? நிதி அமைச்சு முழுமையாக பஸிலிடம் செல்வதாக தகவல்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை துறக்கவுள்ளவர், நாளைய தினம் அந்த அரசியல் தியாகத்தை செய்வார் என்று 'மொட்டு' கட்சித் தகவல்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நாளைய தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போதே பஸிலுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, தேசியப் பட்டியல் எம்.பி. துறந்து, சிறப்புரையாற்றுவார் எனவும் அறியமுடிகின்றது.
அதேவேளை, பஸில் ராஜபக்சவுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியுடன் நிதி இராஜாங்க அமைச்சு பதவியே வழங்கப்படவுள்ளது என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தாலும், நிதி அமைச்சையும் அவருக்கு முழுமையாக வழங்குவதற்கு பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதன்படி நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவே பஸில் ராஜபக்ச பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.