கொரோனா மரணங்களை அதிகரிப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
மக்களை வீதியில் இறக்கும் கோவிட் தொற்று நோயை பரப்பி, மரணங்களில் எண்ணிக்கை அதிகரித்து, மீண்டும் நாட்டை மூட வைப்பதே அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் உண்மையான நோக்கம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranathunga) தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று நோயை அதிகரிப்பதன் மூலம் எதிர்க்கட்சி குரூர மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட நாட்டையே எமக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கம் கையளித்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எமக்கு நினைவிருக்கின்றது.
எனினும் 1977 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி, நாட்டு மக்களுக்கு சோசேஜ் ஊட்டி, சீஸ், பட்டரை ஊட்டி, தேசிய உற்பத்திகளை அழித்தார்.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நாட்டின் தேசிய உற்பத்தி செயற்பாடுகளை வலுப்படுத்தியது. 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், அதனை முற்றாக அழித்தது. மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டு, பொருளாதாரம் அழிக்கப்பட்ட நாட்டையே நாங்கள் 2019 ஆம் ஆண்டு பொறுபேற்றோம்.
மத்திய வங்கியின் இந்த கொள்ளையின் பின்னர், அச்சத்திலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். புலிகளின் பயங்கரவாத யுத்தம் போல், 88-89 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியின் புரட்சியும் இந்த நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர், உலக கோவிட் தொற்று நோயை எதிர்கொள்ள நேரிட்டது.இந்த தொற்று நோய் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை அழித்தமையும் நாம் எதிர்நோக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.