முருங்கன் ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை கிளினிக் ஆரம்பம் (PHOTOS)
மன்னார் - முருங்கன் ஆதார வைத்தியசாலையில் இன்று கண் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் பெருநிலப்பரப்பில் வாழும் மக்கள் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தர பல்வேறு இடர்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
பரிசோதனை நாட்கள்
குறிப்பாக போக்குவரத்து, பொருளாதார சுமைகளையும், ஏனைய சிரமங்களையும் குறைக்கும் நோக்குடன் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதனிலை , இரண்டாம் நிலை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் (P.S.S.P) பீ.எஸ்.எஸ்.பீ செயற்திட்டத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட கண் சிகிச்சை உபகரணங்கள் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்டு குறித்த கிளினிக் இன்று(7) ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த கிளினிக் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.




