ஒரு கோவிட் நோயாளி தான் சிகிச்சைப் பெறுவதை தேர்வு செய்ய முடியும்! சுதர்ஷனி
கோவிட் நோயாளி ஒருவர், தாம், ஆயுர்வேத மருத்துவமனையில் அல்லது மேற்கத்திய வைத்தியமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை தேர்வு செய்வதற்கு அவருக்கு சுதந்திரம் உள்ளது என்று முதன்மை சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நாட்டின் ஆயுர்வேத மருத்துவமனைகளை இடைநிலை பராமரிப்பு மையங்களாகப் பயன்படுத்துவதற்கான முடிவை இறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஆயுர்வேத மருத்துவமனை ஊழியர்களுக்கு கோவிட் நோயாளிகளைக் கையாள்வதற்கான அடிப்படை பயிற்சியையும், நோயாளிகளுக்கு இடமளிக்க போதுமான வசதிகளையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளும் சுகாதார அமைச்சக அதிகாரிகளின் மேற்பார்வையில் இயங்கும். இந்த விடயத்தில் வழிகாட்டுதல்களை வெளியிடவும், ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஆயுர்வேத மருத்துவமனைகளை இயக்க ஏற்பாடு செய்யுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஒரு வாரத்திற்குள் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அமைச்சுகளின் பிரதிநிதித்துவத்துடன் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத
மருத்துவமனைகளுக்கு அண்மையில் அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அனுமதி
வழங்கியமை குறிப்பிடத்தக்கது.