முல்லைத்தீவில் இரண்டு கரடிகளால் தாக்கப்பட்டு நபரொருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
நான்கு பிள்ளைகளின் தந்தை
முல்லைத்தீவு - கொக்காவில் காட்டுப் பகுதியில் நபரொருவர் இரண்டு கரடித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறிகண்டி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் விறகு வெட்ட சென்ற நிலையிலே இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவபாலகிருஸ்ணன் என்ற 38 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
கொக்காவில் பகுதியில் உள்ள பெண்கள் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் சம்பவம் இடம்பெற்ற நிலையில், பெண் இராணுவ வைத்திய குழுவினரால் முதலுதவியளிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை
நேற்று மாலை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்ணை சுற்றி காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நபர் ஆபத்தான நிலையில் இல்லை எனவும், தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் இன்று சத்திரசிகிச்சைக் கூடத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விடுதிக்கு மாற்றப்படுவார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.