ஓட்டமாவடி பகுதியில் கோவிட் தொற்றால் உயிரிழந்த 156 உடல்கள் அடக்கம்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் சனிக்கிழமை மாத்திரம் பத்தொன்பது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதுடன், இதுவரைக்கும் 156 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சூடுபத்தினசேனையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின்156 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதில் இரண்டு வெளிநாட்டவர்கள், பௌத்த மதத்தவர் ஒருவர், இந்து மதத்தவர் மூன்று, கிறிஸ்தவ மதத்தவர் ஆறு பேரின் உடல்கள் அடங்கலாக நூற்று நாற்பத்து நான்கு இஸ்லாம் மதத்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக மரணிப்பவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றது. புதுவருட கொத்தணிக்கு பிறகு தற்போது நோன்பு பெருநாளுக்குப் பின்னரான வைரஸ் தாக்கமும் உருவாகலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் மாத்திரம் அதிக கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக ஓட்டமாவடி பிரதேசத்தில் எவரும் உயிரிழக்காத வகையில் விழிப்புடன் செயற்பட வேண்டும். எனவே முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிராம மட்ட குழுவினரை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியிலிருந்து நோன்பு காலத்தில் யாரும் வருகை தந்திருந்தால் அவர்களை எமக்குத் தெரியப்படுத்தி அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பட்சத்திலும் எமது பகுதியினை காப்பாற்ற முடியும்.
எனவே எமது பிரதேசத்தில் கோவிட் தாக்கம் அதிகரிக்காத வகையில் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அன்டிஜன் பரிசோதனைகள் பெறப்பட்டு அதன் மூலம் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் வீதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அத்தோடு வியாபார நிலையங்களின் உள்ளவர்களுக்கும் திங்கட்கிழமை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரிக்காத வகையில் அனைத்து
தரப்பினரும் சுகாதார திணைக்களத்திற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும், வெளி
இடங்களிலிருந்து வருகை தந்தால் சுகாதார திணைக்களத்திற்குத் தெரியப்படுத்தி
பிரதேசத்தினை காப்பாற்ற முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.