நீதிமன்றத்தை அவமதித்த பொலிஸ் மா அதிபர்: நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (24.09.2022) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.எஸ்.வீரசேகர, சிரேஷ்ட பொலிஸ அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மென்டிஸ் மற்றும் அதிகாரி சனத் குமார ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த ஜயவர்தன , எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் கைது
செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸின் வேதனத்தை வழங்குவதற்கு
தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமையின் காரணமாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸூக்கு வேதனம் வழங்க வேண்டும் என கடந்த மே 18 ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மெண்டிஸ் கைது
வர்த்தகர் ஒருவரின் கொலை தொடர்பில், மகன் மற்றும் நான்கு பேருடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் அதிபர் வாஸ் குணவர்தனவை கைது செய்வதற்கு காரணங்களை முன்வைக்கும் வகையில், தமது உயர் அதிகாரியான ஷானிஅபேசேகரவுடன் சில இடங்களில் ஆயுதங்களை வைத்தார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி மெண்டிஸ் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எனினும் மெண்டிஸுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பல முரண்பாடான நிலைப்பாடுகளைக் குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், ஷானி அபேசேகரவுடன் அவருக்கும் பிணை வழங்கியது.
இந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட தமது வேதனத்தை தருமாறு கோரி மெண்டிஸ்
உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்தே அவரின் வேதனத்தை வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.