நீதிமன்ற உத்தரவை அவமதித்த பொதுச்சேவை ஆணைக்குழு!
குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் முன்னாள் துணைப் பரிசோதகர் சுகத் மெண்டிசும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து முன்னாள் துணைப் பரிசோதகர் சுகத் மெண்டிஸின் பணி இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அவருக்கான சம்பளத்தை வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், பொதுச்சேவை ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவு
கடந்த மே 18 ஆம் திகதி முன்னாள் துணை ஆய்வாளர் சுகத் மெண்டிஸுக்கு 23.03.2022 முதல் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் இந்த உத்தரவு செயற்படுத்தப்படாமையை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள, சுகத் மெண்டிஸ், நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அவமதிக்கும் வகையில் பொதுச்சேவைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பிரதிவாதிகள் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மனு விசாரணைக்கு
சட்டத்தரணி லிலந்தி டி சில்வாவின் ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்த மனுதாரர், மனு விசாரணைக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய எழுத்து மூலமான சமர்ப்பணங்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இந்தநிலையில் மனு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாமை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில், நான்கு பேருடன் முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவை கைது செய்வதற்காகவும் அவர் சில ஆயுதங்களை வைத்திருந்தார் என்று காண்பிப்பதற்காகவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது உயர் அதிகாரி எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகரவுடன் இணைந்து, சில இடங்களில் ஆயுதங்களை வைத்தார் என்ற குற்றச்சாட்டில், மெண்டிஸ் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மெண்டிஸுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பல முரண்பாடான நிலைப்பாடுகளை குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், ஷானி அபேசேகரவுடன், அவருக்கும் பிணை வழங்கியது.
இதனையடுத்தே அவருக்கான சம்பளத்தை வழங்குமாறு
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.