இலங்கை வரும் விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள்,வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையத்தினூடாக எடுத்து வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறினால், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கடந்த சில நாட்களாக பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகின்றமை அதிகரித்துள்ளமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்து அலங்கார செடிகள் போன்ற பொருட்களும், தற்காலிகமாக இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள சில பொருட்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில பயணிகள் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி வணிக அளவுகளில் பொருட்களை கொண்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, விமான நிலையம் வழியாக குறித்த பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் சுங்கப் பணிப்பாளர் பி.பி.எஸ்.சி.நோனிஸ் வலியுறுத்தியுள்ளார்.