மக்களை வதைக்கின்ற தற்போதைய அரசாங்கம் தேவையில்லை: கொட்டகலையில் போராட்டம் (Photos)
தமக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தால் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காகக் கடந்த மூன்று நாட்களாகவே, கொட்டகலை நகரிலுள்ள எரிபொருள் நிலையத்துக்கு மக்கள் வருகின்றனர்.
எனினும், மண்ணெண்ணெய் இல்லை எனக்கூறி மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இன்று சாலைமறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திம்புள்ள - பத்தன பொலிஸார், மக்களுக்கு நிலைமையை எடுத்துரைத்து, அவர்களை கலைந்து செல்லுமாறு கோரினர். இதனையடுத்து மக்களும் அங்கிருந்து சென்றதுடன் போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பியது.
எனினும், மண்ணெண்ணெய் வைத்துக்கொண்டுதான், இப்படி அநீதி செய்கின்றனர், தற்போதைய அரசாங்கமும் மக்களை வதைக்கின்றது. இப்படியான அரசாங்கம் தேவையில்லை என மக்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.