வெளிநாடுகளில் சிக்கிய முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலங்கள்! நாமலின் கைதி பின்னணியில் ஏமாற்றப்படும் மக்கள்
அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் - நாச்சாதூவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு
"நகர சபைக்குச் சொந்தமான மைதானங்களில் ஒன்று பொலிஸ் அணிவகுப்புப் பயிற்சிக்காகவும், மற்றொன்று வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்ததாலுமே நாமல் தரப்புக்கு உடனடியாக வழங்க முடியாமல்போனது.
முன் அனுமதி இன்றி மைதானங்களை ஒதுக்க முடியாது என்ற போதிலும், வெறுமையாக இருக்கும் வேறு எந்தவொரு மைதானத்தையும் வழங்குவதற்கு நகர சபை தயாராகவே உள்ளது. எனவே, மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.
நாமல் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். நாமல் உள்ளிட்டோர் எதிர்நோக்கும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல.
நீதிமன்றத்தில் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும் போது பாம்பு கடித்துவிட்டதாகக் கூறித் தப்பித்த கதைகள் இனி செல்லுபடியாகாது.
சட்டவிரோத சொத்துகள் அரசுடைமை
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்குமாறு மக்கள் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், இதுவரை 4 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துகள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிநாடுகளுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் சேவைக் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீடித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் திறனையும் உறுதிப்படுத்தவே அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21