எந்தவொரு அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றவில்லை - உதயச்சந்திரா (Video)
ஆட்சிக்கு வருகின்ற எந்தவொரு அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படுவதில்லை என மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (13.10.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ஆட்சிக்கு வருகின்ற எந்தவொரு அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காகவும் நீதியை பெற்று தருவதற்காகவும் செயற்படவில்லை.
பாதுகாப்பு
அவர்கள் தமது அரசாங்கத்தையும், தமது மக்களையும் இராணுவத்தையும் பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தை ஆதரித்து போர்க்குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கே அவர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 2 இலட்சம் ரூபாய் பணமும் மரண சான்றிதழும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
தற்போது அதற்கு வட்டியுடன் சேர்த்து 2 இலட்சம் தருவதாக கூறுகின்றனர். நாட்டில் ஏற்பட்ட இனப்படுகொலைக்கு எமது பிள்ளைகள், உறவுகள் காணாமல் போனதற்கு காரணம் தற்போதைய ஜனாதிபதி.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அம்மாக்கள் வீதிகளில் நின்று போராடி வருகின்றனர்.
கையில் ஒப்படைக்கப்பட்ட, கண் முன்னே பிடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் வீதியில் நின்று போராடி வருகின்றோம்.
சுமார் இரண்டாயிரம் நாட்களையும் தாண்டியுள்ளது எமது போராட்டம்.
எமக்கு நீதி வேண்டும். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று நாங்கள் கேட்டுக்கோண்டே இருக்கின்றோம்.
நாங்கள் அரசிடம் நிதி கேட்கவில்லை. இவர்கள் வழங்கவுள்ள 2 இலட்சத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆணைக்குழு
இந்த சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி, ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழு வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளனர்.
இனியும் அவர்கள் என்ன விசாரணைகளை முன்னெடுக்க போகின்றார்கள். நீங்கள் எங்களுக்கு 2 இலட்சம் தர வேண்டாம்.
நாங்கள் உங்களுக்கு 4 இலட்சம் தருகின்றோம். எங்களது பிள்ளைகளுக்கு என்ன
நடந்தது என்று கூறுங்கள்” என தெரிவித்துள்ளார்.



