ஜனாதிபதி அநுர தலைமையில் விரைவில் தேசிய அரசாங்கம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மிக இரகசியமாகவும், அதே நேரம் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையானது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலையில், ஜனாதிபதி எதிர்க்கட்சி அரசியல் குழுக்களையும் தனிநபர்களையும் ஒருங்கிணைத்து, ஒரு தேசிய அரசாங்கத்தையோ அல்லது அதுபோன்ற ஒரு புதிய ஆளுகைக் கட்டமைப்பையோ நோக்கி நகரத் தயாராகி வருவதாக அரசியல் களத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பெலவத்தையை மையமாகக் கொண்ட இடதுசாரி அரசியல் குழுக்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, ஒரு புதிய பயணத்தைத் தொடங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
தொலைபேசி அழைப்புகள்
அவரது கருத்துக்களில் உண்மை இருப்பதாகவும், தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியம் குறித்து ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆராய்ந்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய பயணத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக, அமைச்சர் விஜித ஹேரத், ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய அதிகாரிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய செயற்பாட்டாளர்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் விடுத்து வருவதாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
நாடாளுமன்ற மாற்றங்கள் மட்டுமின்றி, பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்புகளுக்காக திறமையான எதிர்க்கட்சி பிரமுகர்களை ஒன்றிணைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளை தாக்க முயன்ற ராஜபக்சக்களின் தீவிர விசுவாசி.. 12 வருடங்களுக்கு பிறகு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
நாட்டின் பொருளாதாரம்
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுஜீவ சேனசிங்க, அரசாங்கம் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அநுர எதிர்க்கட்சியை அழைக்க வேண்டிய தேவையேற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் திறமையின்மையால் நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஐந்து மாதங்களுக்குள் டொலரின் மதிப்பு 360 ரூபாவையும் தாண்டி அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.