காடாக மாறி காணப்படும் கொட்டகலை சிறுவர் பூங்கா: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தலவாக்கலை தெவிசிறிபுர, சுபோதகம மற்றும் குமாரகம பகுதிகளில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா தற்போது பராமரிப்பின்றி காடாக மாறி காணப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பூங்காவில் தற்போது உயரமாக வளர்ந்த புற்கள், கொடிகள் மற்றும் பராமரிக்கப்படாத விளையாட்டு உபகரணங்கள் காணப்படுகின்றன.
இதனால் சிறுவர்கள் பாதுகாப்பாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பிரதேச சபை நடவடிக்கை
பூங்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இரும்பு விளையாட்டு அமைப்புகள் துருப்பிடித்து காணப்படுவதுடன், அவற்றைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் புதர்களால் மூடப்பட்டிருப்பது அங்கு நீண்டகாலமாக பராமரிப்பு இடம்பெறவில்லை என்பதைக் காட்டுகிறது.

சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த பூங்கா தற்போது பயன்பாடின்றி காடாக மாறியுள்ளது. இதனை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


