விரைவில் நாமலுக்குப் பிணை..! மகனை சிறையில் சந்தித்த பின் மகிந்த வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.
எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்ச இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல.
இக்கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது, இச்சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.
நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த அவர், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நாமல்..
நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.